MUJAHITH

MUJAHITH
hithayath

Monday, February 16, 2015

சுவர்க்கத்தின் தலைவி பாத்திமா நாயகி

அன்னை பாத்திமா அவர்கள் பாவ அசூசியை வென்ற அதி பரிசுத்தவான்களின் பட்டியலில் இடம் பெறுகின்றவர். ஆகவே அன்னாரது சிறப்புக்களைச் சித்தரிப்பது என்பது இலகுவானதல்ல. அன்னை பாத்திமாவையும் அவரது குடும்பத்தினரையும் நேசித்து அவர்களது வழிபற்றி நடப்பது எமது கடமையாகும்.
பாத்திமாவின் கோபத்தால் இறைவன் கோபப் படுகிறான். பாத்திமா விரும்புவதை இறையோனும் விரும்புகின்றான். இத்தகு மாட்சிமை பொருந்திய மங்கையின் சிறப்பை மானுட வார்த்தைக்குள் வர்ணிப்பது எவ்விதம் சாத்தியமாகும்?
அன்னையாரின் மகிமை பற்றி நபியவர்களும், உன்னத இமாம்களும் சொல்வதைக் கேளுங்கள்.
நபி(ஸல்)அவர்கள்
"
அல்லாஹ்வின் கட்டளைப்படி என்னிடம் வந்த வானவர் ஒருவர், பாதிமா சுவனத்திலுள்ள பெண்களுக்குத் தலைவியாவார் எனவும் ஹஸனும் ஹுஸைனும் சுவர்க்கத்து இளைஞர்களின் தலைவர்கள் எனவும் நன்மாராயம் கூறிச் சென்றார்."

"
உலக மாதர்களில் உன்னதமானவர்கள் நால்வர். இம்றானின் மகள் மர்யம், குவைலிதின் மகள் கதீஜா, மஸாஹிமின் மகள் (பிர்அவ்னின் மனைவி) ஆஸியா மற்றும் முஹம்மதின் மகள் பாத்திமா."

"
சுவனம் நான்கு பெண்களைக் காண ஆசைப்படுகிறது. அவர்கள், இம்ரானின் மகள் மர்யம், பிர்அவ்னின் மனைவி ஆஸியா, குவைலிதின் மகள் கதீஜா, மற்றும் முஹம்மதின் மகள் பாத்திமா ஆவர்."

"
இறைவன் பாத்திமாவின் கோபத்தால் கோபமடைகிறான். பாத்திமாவின் மகிழ்சியை விரும்புகினள்றான்."

இமாம் மூஸா இப்னு ஜஉபர் (அலை)

"
இறைவன் நான்கு பெண்களை சிறப்புள்ள பெண்களாகத் தேர்ந்தெடுத்துள்ளான். அவர்கள் மர்யம், ஆஸியா, கதீஜா,பாத்திமா (அலைஹின்னஸ்ஸலாம்) ஆவர் என நபியவர்கள் அறிவித்துள்ளார்கள்."

இமாம் றிழா (அலை)

"
எனக்கும் அலீக்கும் பிறகு இவ்வுலகில் சிறந்தவர்களாக ஹஸனும் ஹுஸைனும் உள்ளனர். பெண்களில் சிறந்தவராக இவ்விருவரின் தாயாரான பாத்திமா திகழ்கிறார் என நபியவர்கள் நவின்றார்கள்.||
இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் இருவரும் தமது ஹதீஸ் கிரந்தங்களில் பின்வரும் ஹதீஸை அறிவித்துள்ளார்கள்:

"
பாத்திமா சுவனத்துப் பெண்களின் தலைவியாவார்."

"
பாத்திமா சுவனத்துப் பெண்களுக்குத் தலைவி என்ற நாயகத்தின் கூற்றுக்கு, பாத்திமா தனது காலத்துப் பெண்களுக்கு மட்டும் தான் தலைவி என பொருள் கொள்ளலாமா?" என இமாம் சாதிக் அவர்களிடம் கேட்கப்பட்ட போது:
"இக் கூற்று ஹஸரத் மர்யத்தைத் தான் குறிக்கிறது. அவர் தான் தமது காலத்துப் பெண்களுக்குத் தலைவியாகத் திகழ்ந்தார், ஆனால் பாத்திமாவோ சுவனத்திலுள்ள ஆரம்ப முதல் கடைசி வரையிலான அனைத்துப் பெண்களுக்கும் தலைவியாவார்" எனக் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே, பாத்திமா தனது காலப் பெண்களுக்கா தலைவி? என வினவப்பட்ட போது, "இம்றானின் மகளான மர்யம் தான் தனது காலப் பெண்களின் தலைவியாக இருந்தார். ஆனால் எனது மகள் பாத்திமா உலகத்திலுள்ள ஆரம்ப முதல் கடைசி வரையிலான அனைத்துப் பெண்களினதும் தலைவியாகும்" எனப் பதிலளித்தார்கள்.

கியாமத் நாளன்று இறைவனின் அர்ஷுக்குக் கீழ் இருந்து ஒரு சப்தம் வெளியாகும். "சிருஷ்டிகளே, முஹம்மதின் மகள் பாத்திமா ஸிராத் பாலத்தைக் கடக்க வருகிறார். தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்" எனக் கூறப்படும் என அண்ணல் நபியவர்கள் அருளியதாக தமது தந்தை அறிவித்ததாக இமாம் றிழா அலைஹிஸ் ஸலாம் கூறினார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அருளியதாக, அபூ ஐயூப் அன்ஸாரி (றழி) அறவிப்பதாவது: கியாமத் நாளன்று அல்லாஹ்வின் அர்ஷின் கீழிருந்து ஒரு சப்தம் வெளியாகி, சனங்களே, பாத்திமா சிராத் பாலத்தைக் கடக்கப் போகிறார். உங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் எனக் கூறும். அப்போது பாத்திமா நாயகி அவர்கள் எழுபதினாயிரம் ஹுருல் ஈன் பெண்களுடன் சிராத்துல் முஸ்தகீமைக் கடந்து செல்வார்கள்.

நபி (ஸல்)அவர்கள், அன்னை பாத்திமாவை நோக்கி, "பாத்திமாவே! இறைவன் மீண்டும் ஒரு முறை மானிட வர்க்கத்தைப் பார்த்து விட்டு அவர்களிலிருந்து உமது கணவரைத் தேர்;ந்தெடுத்து உமக்கு அவரை மணமுடித்துக் கொடுக்கும் படி எனக்கு வஹீ மூலம் அறிவித்தான். உம்மை சங்கைப்படுத்துவதற்காக முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவரை மணமுடித்துத் தந்துள்ளானே" என நவின்றார்கள்.
இமாம் சாதிக் (அலை) அறிவிக்கிறார்கள்:
ஹஸரத் அலீ அவர்களை இறைவன் பாத்திமாவுக்கு கணவராகப் படைக்கவில்லை என்றிருந்தால் பாத்திமாவுக்கு இந்த உலகில் கணவரே இருந்திருக்காது.

இமாம் சாதிக் கூறியதாக சுப்யான் இப்னு உயைனிய்யா அறிவிப்பதாவது:

مرج البحرين يلتقيان -‘இரண்டு சமுத்திரங்கள் ஒன்றையொன்று சந்திக்க அனுமதித்தான்’ என்ற திருவசனங்களின் வியாக்கியானம் ஹஸரத் அலீயும் பாத்திமாவும் ஆவர். அவ்வாறேيخرج منهما اللوُِلوً والمرجانஅவை இரண்டிலும் இருந்து முத்தும் மாணிக்கமும் வெளியாகும்’ என்றால் ஹஸனும் ஹுஸைனும் ஆவர்.

அன்னை பாத்திமா ஏன் அஸ்ஸஹ்ரா (பளிச்சிட்டு இலங்கக் கூடியது) என அழைக்கப்படுகிறார் என இமாம் ஸாதிக் அவர்களிடம் கேட்கப்பபட்ட போது, பாத்திமா தன் தொழுகைக்காக மிஹ்ராபில் நிற்கின்ற போது, பூமியில் வசிப்போருக்கு நட்சத்திரங்கள் இலங்குவதைப் போன்று வானோருக்கு பாத்திமா இலங்கிக் கொண்டிருப்பார் என விளக்கினார்கள்.

பாத்திமா எப்போதாவது இறை வணக்கத்தில் திளைத்துவிடும் போது அவர்களின் சிறு குழந்தை அழுதால் அக்குழந்தையின் தொட்டிலை இறைமலக்கு ஒருவர் ஆட்டி விடுவதாக றிவாயத்துகளில் கூறப்பட்டுள்ளது.

இமாம் பாக்கிர் (அலை):அவர்கள்  அறிவிக்கின்றார்கள்.

சல்மான் பார்ஸி (றழி) அவர்கள் கூறினார்கள். நபியவர்கள் என்னை ஒரு காரியமாக பாத்திமாவின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். நான் அங்கு சென்ற போது அன்னை வணக்கத்தில் ஈடுபட்டு ஓதிக் கொண்டிருப்பதைச் செவியுற்றேன். அவரது வீட்டிலுள்ள கோதுமை அரைக்கும் கல் இயங்கிக் கொண்டிருப்பதையும் கண்ணுற்றேன்.


தந்தையின் பாசம் :



அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருமை மகள் பாத்திமா மீது கொண்டிருந்த அளவற்ற பாசம் பாத்திமாவைப் பொறுத்த வரை மகத்துவமிக்க தம் வாழ்வை மேலும் ஒளிமயமாக்குவதாகவே இருந்தது மட்டுமன்றி நபிகளாரின் வாழ்விலும் கூட வியக்கத்தக்க அம்சமாகவே காணப்பட்டது.

அண்ணல் நபிகளாரின் சிறப்புகள் வர்ணிப்புகளுக்கு அப்பாற்பட்டதாகும். நற்குணங்களின் சிகரமாகத் திகழ்ந்த அன்னாரின் மகிமை மனித குலத்தைத் தாண்டி விண்ணுலகத்தாரிற்கும் அறிமுகமாகி இருந்தது. ‘இறைஞான வெளிப்பாடாகவே அன்றி தம் இச்சைப்படி எதையும் சொல்பவர் அன்று" என இறைவனாலேயே விதந்துரைக்கப்பட்டவர்.

அத்தகைய சிறப்புகள் பெற்ற அண்ணல் நபியவர்களின் அளப்பரிய நேசத்துக்கும் பாசத்துக்கும் ஆளாகும் சிறப்புக் கிடைக்கப் பெறுபவர் ஐயம் எதுவுமின்றி மிக்க மரியாதைக்கும் கண்ணியத்துக்கும் புனிதத்துக்கும் உரித்தானவர் ஆவார். இதனால் தான் அன்னை பாத்திமாவை இமாம்கள், பரிசுத்தவான்களின் பட்டியலில் கூட சேர்த்துக் கணிப்பிடுகிறார்கள்.

அருமை நபியவர்கள் தமது ஏனைய பிள்ளைகள் மீதும் பாசம் வைத்திருந்தார்கள். எனினும் பாத்திமா மீது காட்டிய பாசம் வித்தியாசமானதாகவே இருந்தது. அது ஒரு பாசமிக்க தந்தை தன் மகள் மீது வைக்கின்ற சாதாரண பாசமாக மட்டும் இருக்கவில்லை. பாத்திமாவின் மகிமையை உலகுக்கு விதந்துரைக்கும் பாசமாக அமைந்தது.

அந்த இணையற்ற பாசத்தின் வெளிப்பாடுகளாக அமைந்த சில சம்பவங்களைக் கவனியுங்கள்.

1. அண்ணல் நபியவர்கள் எப்போதாயினும் பிரயாணம் மேள்கொள்ள விரும்பினால் இறுதியாக ஹஸ்ரத் பாத்திமாவிடமே விடைபெற்றுக் கொள்வார்கள். அவ்வாறே பிரயாணத்திலிருந்து திரும்பி வந்ததும் முதலில் பாத்திமாவையே காணச் செல்வார்கள்.

2. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தூங்கச் செல்லும் முன்னர் பாத்திமாவின் திருமுகத்தில் முத்தமிட்டு அவரது தலையை தம் நெஞ்சோடு அணைத்துக் கொள்வார்கள் என இமாம் பாக்கிர் மற்றும் இமாம் ஸாதிக் இருவரும் அறிவிக்கின்றார்கள்.

3. அன்னை பாத்திமா நவின்றதாக இமாம் ஸாதிக் அறிவிக்கிறார்கள்: "நீங்கள் ஒருவரையொருவர் விளித்து அழைத்துக் கொள்வதைப் போன்று நபியவர்களை அழைக்க வேண்டாம்" 
"இத்தூதரை அழைப்பதை உங்களுக்கிடையில் சிலர் சிலரை
அழைப்பது போன்று ஆக்கிக்கொள்ளாதீர்கள். உங்களில்
யார் மறைவாக நழுவிச் செல்கிறார்களோ அவர்களை
அல்லாஹ் நன்கறிவான்.அவரின் கட்டளைக்கு மாறு
செய்வோர் தமக்கு ஒரு துன்பம் நேருவதையோ
அல்லது தமக்கு நோவினை தரும் வேதனை
ஏற்படுவதையோ அஞ்சிக்கொள்ளட்டும்".
(அல்குர்ஆன் .24:63) சூரத்துன் நூர் அத்தியாயம் 24 வசனம் 63
என்ற குர்ஆன் வசனம் அருளப்பட்ட பின்னர் நபிகளாரை தந்தையாரே என அழைக்கப் பயந்து அல்லாஹ்வின் தூதரே என்று அழைக்கலானேன். ஓரிரு தடவைகள் இதனை நன்கு அவதானித்த நபியவர்கள் ஒரு முறை என்னிடம் சொன்னார்கள்:

"
பாத்திமாவே, இந்தத் திருவசனம் உமக்காகவோ உமது சந்ததியைச் சேர்ந்தவருக்காகவோ இறக்கப்பட்டதல்ல. நானோ உன்னைச் சார்ந்தவன். நீரும் என்னைச் சார்ந்தவள்..... எனவே நீர் என்னை வழமை போன்று தந்தையே என்றே அழைத்து வருவீராக. அது எனது உள்ளத்துக்கு அமைதியைத் தருவதோடு இறைவனையும் மகிழ்விக்கிறது."

4. இறைத் தூதர் (ஸல்) அருளினார்கள்: "பாத்திமா என் உடம்பின் ஒரு பகுதியாவார். எவர் பாத்திமாவை சந்தோஷப் படுத்துகிறாரோ அவர் என்னை சந்தோஷப்படுத்துகிறார். எவர் அவரை நோவினை செய்கிறாரோ அவர் என்னையும் நோவினை செய்தவாராவார். பாத்திமா என்னிடம் மிகவும் சங்கை மிக்கவர் ஆவார்."

5. அண்ணல் நபியவர்கள் மீண்டும் இயம்பினார்கள்: "பாத்திமா எனது உடலினதும் உயிரினதும் உள்ளத்தினதும் ஒரு பகுதியாவார். எவர் பாத்திமாவைத் தொல்லைப் படுத்துகின்றாரோ அவர் என்னை நோவினை செய்கிறார். எவர் எனக்கு வேதனையைத் தருகின்றாரோ அவர் அல்லாஹ்வை நோவினை செய்வது போலாகும்."

6. ஆமிர் ஷஃபீ, ஹஸன் பஸரீ, சுப்யான் ஸவ்ரீ, முஜாஹித், இப்னு ஜுபைர், ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அல் அன்ஸாரீ, இமாம் பாக்கிர் மற்றும் இமாம் ஸாதிக் போன்றோர் அறிவிப்பதாவது: "பாத்திமா எனது உடலின் ஒரு பகுதியாகும். எவர் பாத்திமாவை நோவிக்கின்றாரோ அவர் என்னை நோவிக்கின்றார்" என நபியவர்கள் திருவுளமானார்கள்.

7. நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை பாத்திமாவின் கையைப் பிடித்தவர்களாக வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். பின்னர் முன்னின்றோரை நோக்கிச் சொன்னார்கள்: "இவரை (பாத்திமாவை)- யாருக்கெல்லாம் தெரியுமோ அவர்கள் இவரை அறிந்து கொண்டார்கள். இன்னும் எவர்கள் பாததிமாவை அறிந்து கொள்ளவில்லையோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். இவர் தான் முஹம்மதின் புத்திரி பாத்திமா. இவர் எனது உடம்பினதும் உள்ளத்தினதும் உயிரினதும் ஒரு பகுதியாவார். எனவே எவர் பாத்திமாவை நோவினை செய்கின்றாரோ அவர் என்னை நோவிக்கின்றார். எவர் என்னை நோவிக்கின்றாரோ அவர் அல்லாஹ்வை நோவித்தவராவார்"
8. மேலும் ஒரு முறை நபியவர்கள் நவின்றார்கள்: "என் மகள் பாத்திமா உலகத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரைக்குமுள்ள அனைத்து பெண்களினதும் தலைவியாவார். பாத்திமா எனது உடலின் ஒரு பகுதி. எனது கண்ணின்ஒளி. எனது ஆறுயிர், எனது இதயக் கனி. பாத்திமா மனிதத் தோற்றத்தில் வந்த விண்ணுலகப் பெண்மணி. பாத்திமா தொழுகைக்காக நிற்கும் போது, பூமியிலுள்ளோருக்கு வானத்து நட்சத்திரங்கள் இலங்கு வதைப் போன்று வானுலகத்தோருக்கு இலங்கிக் கொண்டிருப்பார். அவ்வேளை இறைவன் தனது மலக்குகளை நோக்கி, என் சந்நிதானத்தில் என்னை அஞ்சி நடுங்கி வழிபடுகின்ற என் அடிமை பாத்திமாவைப் பாருங்கள். பாத்திமா என்னை உண்மையாகவே வணங்குபவர். பாத்திமாவை வழிப்படுகின்ற எவரையும் நான் நரகத்தில் போடமாட்டேன். இதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் எனக் கூறுவான்."
பாத்திமா நாயகியின் திருமணம்.
ஹிஜ்ரி இரண்டாம் வருடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மங்கை பாத்திமாவை அண்ணல் அலீக்கு மணமுடித்து வைத்தார்கள். இவ்விருவரினதும் தரத்துக்கும் அந்தஸ்துக்கும் ஏற்புடையதாக அத்திருமணம் அமைந்தது. இமாம்களின் கூற்றுப்படி பாத்திமாவுக்குக் கணவராக ஹஸ்ரத் அலீ படைக்கப்பபடவில்லை யென்றிருந்தால் பாத்திமாவுக்கு உகந்த துணை யாரும் இருந்திருக்க முடியாது.

ஹஸ்ரத் அலீயினதும் அன்னை பாத்திமாவினதும் சிறப்புகளை மேலும் புலப்படுத்தும் விதமாக இத்திருமணம் அமைந்திருந்தது. பாத்திமாவை மணந்துகொள்ள குறைஷி முக்கியஸ்தர்கள் பலர் முன்வந்த போதெல்லாம் நபியவர்கள்‘பாத்திமாவின் திருமணம் அல்லாஹ்வின் கையிலேயே இருக்கிறது’ எனப் பதிலளித்தார்கள்.
ஆனால் ஹஸ்ரத் பாத்திமாவைப் தனக்கு மணமுடித்து தருமாறு ஹஸ்ரத் அலீ(ரலி)அவர்கள் நபியவர்களிடம் கேட்டுச்சென்ற போது எவ்வித மறுப்புமின்றி சம்மதம் தெரிவித்ததோடு, சற்று முன்னர் தான் ஜிப்ரயீல் (அலை) பிரசன்னமாகி, பாத்திமாவை அலீக்கு மணமுடித்துக் கொடுக்க கட்டளையிட்டதாக அறிவித்துச் சென்றதாகக் கூறினார்கள்.
திருமண செலவுகளுக்காக தம்மிடம் என்ன வைத்திருக்கிறீர்கள் என நபியவர்கள் ஹஸ்ரத் அலீயிடம் வினவிய போது,ஒரு போர்க் கேடயமும் ஒரு வாளும் நீர் கொண்டுவரப் பயன்படும் ஓர் ஒட்டகையும் தம்மிடம் இருப்பதாக அலீ பதிலளித்தார்கள். கேடயத்தை விற்று வரும் 500 திர்ஹம்களில், வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குமாறு அவரைப் பணித்தார் அண்ணல் பெருமான்.
அவ்வாறே குறிப்பிட்ட சில பொருட்கள் வாங்கப்பட்டன. ஏனைய முஸ்லிம்களும் அழைக்கப்பட்டு விருந்து உபசாரமும் வழங்கப்பட்டு நபியவர்களின் பிரார்த்தனையோடு திருமண வைபவம் இனிதே நடந்தேறியது.
ஒளிமயமான இத்திருமணத்தின் எப்பகுதியை உற்று நோக்கினாலும் இறைவனின் தனிக் கிருபையும் அருளும் அதில் நிறைந்து காணப்பட்டதை உணர முடிந்தது. அது மட்டுமன்றி திருமணங்கள் மிக எளிமையாக நடாத்தப் படுவதற்கு சிறந்த முன்மாதிரியாகவும் திகழ்ந்தது.


எளிமையான இனிய இல்லறம் :



ஹஸ்ரத் அலீ(ரலி)அவர்கள் பாத்திமாவைப் பெண்கேட்டு நபியவர்களிடம் வந்த போது, நபியவர்கள் சொன்னார்கள். உமக்கு முன்னரும் பலர் பாத்திமாவைக் கேட்டு வந்த போதும் நான் பாத்திமாவிடம் அது பற்றி விசாரித்ததுண்டு. அப்போதெல்லாம் அதிருப்தியோடு முகத்தைத் திருப்பிக் கொண்டார். நீங்கள் சிறிது இங்கே உட்கார்ந்து கொள்ளுங்கள். பாத்திமாவிடமும் ஒரு வார்த்தை கேட்டு வருகிறேன் என்று கூறியவாறு வீடு சென்றார். பாத்திமாவிட்ம விடயத்தைக் கூறிய போது முன்னர் போன்று அதிருப்தி தெரிவிக்காது மௌனம் சாதித்தார். நபியவர்கள், "அல்லாஹ் மிகப் பெரியவன். பாத்திமாவின் மௌனம் சம்மதத்துக்கு அடையாளமாகும்" எனக் கூறினார்கள்.

ஹஸ்ரத் அலீ(ரலி)அவர்கள் தமது கேடயத்தை விற்று வழங்கிய மஹர் பணத்தில் ஒரு பகுதியைச் செலவிட்டு பின்வரும் பொருட்கள் இல்லறத்துக்காக வாங்கப்பட்டன.

1. பெண்களுக்கான நீண்ட மேலாடை ஒன்று.
2.
ஒரு பெரிய துப்பட்டி.
3.
கைபர் துவாய் ஒன்று.
4.
ஒரு கயிற்றுக் கட்டில்.
5.
ஈத்தம் ஓலை நிரப்பிய ஒரு முதுகு அணை.
6.
ஆட்டு ரோமம் நிரப்பிய ஒரு முதுகு அணை.
7.
நான்கு தலையணைகள்.
8.
ஒரு திரைச் சீலை.
9.
ஓர் ஈத்தம் பாய்.
10.
மாவரைக்கும் கல் ஒன்று.
11.
ஒரு துருத்தி.
12.
தோல் பை ஒன்று.
13.
ஆடை துவைக்கும் பாத்திரம் ஒன்று.
14.
ஒரு பால் கோப்பை.
15.
நீரேந்தும் பாத்திரம் ஒன்று.
16.
சில மண் கூசாக்கள்.
17.
ஒரு சாடி.
ஹஸ்ரத் அலீயும் தம் பங்குக்கு வீட்டு நிலத்தை மணல் தூவி மென்மைப்படுத்தினார்கள். ஆடைகளைக் கொழுவி வைப்பதற்காக மரத் தடியொன்றை வீட்டு நடுவே நட்டார்கள். பதனிடப்பட்ட ஆட்டுத் தோல் ஒன்றையும் ஈத்தம் ஓலையால் ஆன முதுகு அணை ஒன்றையும் மேலதிகமாக வாங்கி வந்தார்கள்.

No comments:

Post a Comment